பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
நடப்பாண்டில் பி.இ. மற்றும் பிடெக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிடுகிறார்.
பட்டியல் வெளியிடப்பட்ட உடன், மாணவர்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் தரவரிசை எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
புகார்கள் எதேனும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு 4 நாட்களுக்குள் மாணவர்கள் தெரிவிக்கலாம்.
வருகிற 25ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 26ந் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு 26ந் தேதி முதல் 28ந் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
