800 கிலோ எடை கொண்ட பகவத் கீதை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து பங்கேற்பாளர்கள் வருகை தருகின்றனர்.
மாண்புமிகு பாரத பிரதமர், திரு. நரேந்திர மோடி அவர்கள், புதுதில்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதியன்று பிரம்மாண்டமான பகவத் கீதை பதிப்பினை வெளியிடுகிறார்.
இந்த தலைசிறந்த நூலிற்கு “வியப்பூட்டும் பகவத் கீதை” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நூல் அதன் மூடப்பட்ட நிலையில் 2.8 மீ x 2 மீ அளவும், 800 கிலோ எடையும் கொண்டதாகும். இஃது உலகிலேயே மிகப்பெரிய பகவத் கீதையாகத் திகழும்.
நிகழ்ச்சிக்கு பிரதமர் வரும்போது மேற்குவங்க மாநிலத்தின் மாயாபுரில் உள்ள பக்திவேதாந்த குருகுலத்தின் சர்வதேச மாணவர்கள் அவரை வரவேற்பர். இந்த திறப்பு விழாவில் இஸ்கான் பக்தர்கள் உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சி குறித்து இஸ்கானின் தேசிய செய்தி தொடர்பாளர் திரு யுதிஷ்டிர கோவிந்த தாஸ் அவர்கள் பின்வருமாறு கூறினார்: “உலகை ஈர்க்கக்கூடிய இந்தியாவின் பல்வேறு காரணிகளில், நமது கலாச்சாரமும் ஆழ்ந்த தத்துவ ஞானமும் மிக முக்கியமானதாகும். இஸ்கான் இயக்கமானது இந்தியா உட்பட உலகெங்கிலும் ஹரி நாம ஸங்கீர்த்தனம், பகவத் கீதையை விநியோகித்தல், பிரசாத விநியோகம், ஆன்மீக பயிற்சி முதலிய பல்வேறு ஆன்மீக சேவைகளை ஆற்றி வருகிறது. இந்திய கலாச்சாரத்தையும் தத்துவ அறிவையும் தன்னகத்தே கொண்டுள்ள பகவத் கீதையினை உலகெங்கிலும் இஸ்கான் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த குறிப்பிட்ட பதிப்பானது இந்தியாவின் சிறப்புகளை பிரதிநிதிக்கும் சின்னமாகவும், வருங்காலத்தின் அமைதி மற்றும் நல்வாழ்விற்கான ஒளிவிளக்காகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.”
இந்த பிரம்மாண்டமான பகவத் கீதை பதிப்பானது 700 மூல சமஸ்கிருத ஸ்லோகங்கள், பதவுரை, மொழிபெயர்ப்பு, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் (இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர்) விரிவான பொருளுரை மற்றும் கண்களைக் கவரும் பதினெட்டு வண்ணப்படங்களுடன் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிழியாமல் இருப்பதற்கும் நீரினால் பாதிப்படையாமல் இருப்பதற்கும் உகந்த தாள்களைக் கொண்டு, இத்தாலியின் மிலன் நகரில் அச்சிடப்பட்டுள்ளது.
யுதிஷ்டிரர் மேலும் தொடர்ந்தார்: “இஸ்கான் பல்வேறு சிறப்புமிக்க நூல்களை வெளியிட்டுள்ள போதிலும், பிரம்மாண்ட பகவத் கீதை பதிப்பை வெளியிடுவது இதுவே முதல் முறை. இந்த பிரம்மாண்ட பதிப்பானது ஸ்ரீல பிரபுபாதருக்கும், கருணை, சேவை, பரம புருஷருடனான உறவு ஆகியவற்றைக் கொண்டுள்ள ஸநாதன தர்மத்திற்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த இஸ்கான் பக்தர்கள் இரவுபகலாக இந்தப் பதிப்பிற்காக தொண்டாற்றினார்.”
ஆன்மீகத் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பண்டிதர்கள், மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்கான் உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பங்கு பெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றுகிறார்.
