17-வது மக்களவையில் கடந்த 20ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர்.
உறுப்பினர்களின் விவாதம் நிறைவுக்கு வந்த நிலையில், அதற்கு பதில் அளித்து மக்களவையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்த பணிகளால் தான் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது என்றார்.
அனைத்து கட்சியினரும் அரசுடன் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்ற அவர், நாட்டின் உயர்வுக்காக அனைவரும் ஒன்று பட வேண்டும் என்றார்.
அனைவரும் ஒன்று பட்டு பணியாற்றினால் எந்த சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்ற மோடி, அனைவரின் ஒத்துழைப்போடு நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல விரும்புவதாக கூறினார்.
தேர்தலில், வெற்றி, தோல்வியை பெரிதாக கருதவில்லை என்ற பிரதமர், 130 கோடி மக்களுக்கு சேவை செய்வதே மிகப்பெரிய காரியம் என்றார்.
70 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சனைகளை ஐந்தே ஆண்டுகளில் தீர்ப்பது கடினம் என்ற அவர், அந்த கடினமான காரியத்தை மத்திய அரசு செய்து முடிக்கும் என்றார்.
காங்கிரஸ் நிதர்சனத்தை மறந்து விட்டது என்ற மோடி, சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் இருந்து அந்த கட்சி விலகி நின்றதே தோல்விக்கு காரணம் என்றார். ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே மத்திய அரசின் லட்சியம் என்று அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி, புதன்கிழமை அன்று பதிலளிக்கிறார்.
