தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மக்கள் மத்தியில் மழைநீர் சேமிப்பு குறித்தும், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்தும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே நீர் சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்து, தனது சொந்த நிலத்தில் மழைநீர் மற்றும் கசிவுநீர் சேகரிப்பு குட்டை ஒன்றை ஏற்படுத்தினார் காங்கேயம் அடுத்த வள்ளியரச்சலைச் சேர்ந்த கார்த்திகேயன்.
2016ஆம் ஆண்டின் மத்தியில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வந்த சூழலில்தான் சிவ சேனாபதி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் கார்த்திகேயனுக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் கசிவுநீர் குட்டை ஒன்றை ஏற்படுத்தும் யோசனை வந்தது. அதன்படி 2017ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பொதுமக்களின் உதவியோடு பிரம்மாண்டமான குட்டை ஒன்றை ஏற்படுத்தினார்.
இந்த குட்டையில் மழைநீரோடு, பவானிசாகர் அணையில் இருந்து பாசன வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரும் கசிந்து சேகரமாகத் தொங்கியது. இதனால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடிநீர் மட்டமும் ஏறத்தொடங்கியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி தாண்டவம் ஆட, வள்ளியரச்சல் கிராம விவசாயிகளுக்கு தனது மடியில் தண்ணீரை சேமித்து வைத்து தடையின்றி உயிர் நீர் ஊட்டி வருகிறது இந்த குட்டை.
பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள், தங்களது நிலங்களில் ஒரு பகுதியை ஒதுக்கி, அதில் இதுபோன்ற குட்டை அமைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் பெரும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும் என்கிறார் கார்த்திகேயன்.
பருவமழை பொய்த்தது ஒரு பக்கம் இருந்தாலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மீது நாம் காட்டிய அலட்சியத்தின் பலனைத்தான் தற்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க எண்ணாமல், புதிய நீர்நிலைகளை ஏற்படுத்தவும் முயற்சிக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
