புதிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த பல்வேறு சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கவும், திருத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
7ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்ற சர்ச்சைக்குரிய வரியை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, இந்தியாவின் அலுவல் மொழி இந்தி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்ற வரிகளை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் 7ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் தெரிந்து கொள்வோம் என்ற பெட்டி செய்தியில், முத்துராமலிங்கத்தேவர் ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி காமராஜர் பெயரில் வரி கட்டி தேர்தலில் போட்டியிட வைத்தார் என்ற வரிகள் முற்றிலுமாக நீக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் ஆட்சியை நிறுவக்கோரி புரட்சியில் ஈடுபட்டனர் என்ற வரிகளை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து வைகுண்ட சுவாமிகள் பற்றிய வரிகளை முற்றிலுமாக நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்டுள்ள வரிகளை உடனே நீக்கியும், புதிய வரிகளைச் சேர்த்தும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
