தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, 2010ஆம் ஆண்டு முதல், திமுக, அதிமுக ஆட்சிகளில் தொடர்ந்து நிதித்துறை செயலாளராக இருந்த, கே.சண்முகம் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் 46ஆவது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட சண்முகம், ஆளுநர் பன்வாரிலாலை, சனிக்கிழமை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஞாயிற்றுக்கிழமைசந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு மற்றும் இருவரிடையேயான ஆலோசனை சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. வெள்ளிக்கிழமை தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடர், ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு அரசும், பல்வேறு திட்டங்களை அறிவிக்கும். மேலும், மானிய கோரிக்கை மீதான விவாதங்களும் நடைபெற உள்ளது. இவை குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இடையேயான சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த கே.சண்முகம், தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். திங்கட்கிழமை முதல், சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதால், ஞாயிற்றுக்கிழமையே, தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
