தலைநகர் டெல்லியை பாதுகாக்க பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அமெரிக்காவிடம் இருந்து 6000 கோடி ரூபாய் செலவில் ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்கள் வாங்கப்பட உள்ளன.
எல்லைக்கு அருகில் உள்ளதால் எதிரி நாடுகளின் ஏவுகணைகளால் குறி வைக்கப்படும் சாத்திய கூறுகளை டெல்லி கொண்டுள்ளது. இதனால் டெல்லியை காக்கும் வகையில், ஏவுகணை தடுப்பு கவசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
5 அடுக்குகளை கொண்டதாக இந்த பாதுகாப்பு கவசம் அமைக்கப்பட உள்ளது. இதில் முதல் அடுக்கு டெல்லிக்கு புறநகரில் அமைக்கப்பட உள்ளது. இதில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான இரு பிரிவு தளவாடங்கள் இடம் பெற்றிருக்கும். முதல் பிரிவில் பிரித்வி ஏவுகணை தடுப்பு அமைப்பு இருக்கும். இதன் இரண்டாவது பிரிவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கண்டம், விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை முறியடிக்கும் அமைப்பு இருக்கும்.
டெல்லியை சுற்றி உள்ள இரண்டாவது அடுக்கில் ரஷ்யாவில் இருந்து 40,000 கோடி ரூபாய் செலவில் வாங்க உள்ள டிரம்ப் என்ற ஏவுகணை முறியடிப்பு சாதனம் இடம் பெற்றிருக்கும். இந்த சாதனம் மூலம் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் எதிரி நாட்டின் 100 வான்வெளி இலக்குகளை கண்டறிய முடியும். டிரைம்ப் 400, ரக அமைப்புகளில் ஐந்தை, வாங்க இந்திய, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வருகிற 2020 முதல் 2023-க்குள் அவற்றை ரஷ்யா வழங்க உள்ளது.
டெல்லியின் மூன்றாவது பாதுகாப்பு அடுக்கில் பாரக் ரக ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் இஸ்ரேல் – இந்திய கூட்டுத் தயாரிப்பான பாரக் ஏவுகணைகள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், ஆளில்லா குட்டி விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றை அழிக்கும் வல்லமை கொண்டவை.
டெல்லியை காக்கும் நான்காவது வளையத்தில், உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக ஆகாஷ் ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கும், ஆகாஷ் ஏவுகணைகள் 60 கிலோ வெடி மருந்தை தாக்கிச் சென்று 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எதிரி இலக்கை தூளாக்கும் வல்லமை கொண்டவை. 18 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இலக்கையும் அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை 720 கிலோ எடை கொண்டது. இந்தியாவிடம் இப்போது சுமார் 3000 ஆகாஷ் ரக ஏவுகணைகள் உள்ளன.
டெல்லியை காக்கும் ஐந்தாவது மற்றும் உள்கடைசி வளையத்தில் அமெரிக்காவின் தயாரிப்பான நாசாம்ஸ் ரக ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் ஒரே நேரத்தில் 6 ஏவுகணைகளை ஏவும் நாசாம் ஏவுகணை எந்திரம், அதனுடன் இணைந்த, வான் வெளி எதிரி இலக்கை துல்லியமாக அடையாளம் காட்டும் ரேடார்கள், ரேடார்களிடம் இருந்து சமிக்கையை பெற்று எதிர் இலக்கை துல்லியமாக வரையறுத்து காட்டும் கருவி, இலக்கை நோக்கி ஏவுகணைகளை ஏவும் கருவி, ஏவுகணைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
இந்த ஏவுகணைகள் 152 கிலோ எடையும், 12 அடி நீளமும் 22 கிலோ வெடிபொருளையும் தாங்கி சென்று இலக்கை, தானே அடையாளம் கண்டு அழிக்கும் வல்லமை கொண்டவை ஆகும். 6000 கோடி ரூபாய் மதிப்பில் நாசாம் ஏவுகணை அமைப்பை அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்து உள்ளது.
மேலும் 5 வது உள் வளையத்தில் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள தயாரான துப்பாக்கி படையும், ஆளில்லா குட்டி விமானங்களை கூட கண்டறிந்து அழிக்கும் தொழில் நுட்பமும் இடம் பெற்றிருக்கும், அமெரிக்காவில் 2001-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 11 -ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் போன்ற சம்பவத்தையும் எதிர்கொள்ளும் வல்லமை உடைய படையணியும் இருக்கும். இந்த 5 பாதுகாப்பு வளையங்களின் மூலம் டெல்லியை முழுமையான எந்த போர் சூழலில் இருந்தும் காக்கும் ஏற்பாட்டை மத்திய அரசு உருவாக்க உள்ளது.
