தமிழகத்தில் ஜூலை 18-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்ற மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ஆம் தேதி நிறைவு பெறுவதாகவும், கனிமொழி மக்களவைக்கு தேர்வு பெற்றதால் அவரது இடம் காலியாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆறு இடங்களுக்குமான தேர்தலின் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என்றும், ஜூலை 8-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
9-ஆம்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறக் கடைசி நாள் என்றும் 11 – ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் என்றும், போட்டி இருந்தால் ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக சார்பில் மூன்று பேரையும், திமுக கூட்டணி சார்பில் மூன்று பேரையும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய முடியும். இதில் பா.ம.கவுக்கு ஒரு இடம் ஒதுக்க அதிமுகவும், மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்க திமுகவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
