தமிழகத்தில் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு ரயிலுக்கு தலா இரு ரயில்வே காவலர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள் தங்களுக்கான பணி நேரம் முழுவதும் ரயில் பெட்டிகளில் தீவிர கண்காணிப்பிலும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்.
அவ்வாறு பணியில் இருக்கும் காவலர்கள் முழு விழிப்புடனும், அர்ப்பணிப்புடனும் செயல்படுகின்றனரா? என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய முறை ஒன்றை ரயில்வே காவல்துறை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, ரயில்களில் உள்ள நான்கு பெட்டிகளில் கியூ ஆர் கோட் அச்சிடப்பட்ட பலகை பொருத்தப்பட்டு இருக்கும்.
குறிப்பிட்ட ரயிலில் பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் காவலர்கள், முதலாவது பெட்டியில் இருக்கும் கியூ ஆர் கோட் பலகையில், தங்களது செல்போன்களை காண்பித்து, கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யும் போது, அந்தக் காவலரின் விவரங்கள் ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு பரிமாற்றப்பட்டு, அவர் பணியில் இருப்பது உறுதி செய்யப்படும்.
மேலும், ரயில் நிலையங்களிலும் கியூ ஆர் கோட் பலகை இருக்கும். ரயில்கள் நின்று செல்லும் நிலையங்களில் எல்லாம், காவலர்கள் இதேபோல் செய்து தாங்கள், கண்காணிப்புப் பணியில் விழிப்புடன் இருப்பதை கட்டுப்பாட்டறைக்கு தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் ரயிலில் உள்ள பெட்டிகளுக்கெல்லாம் போலீசார் ரோந்து செல்கின்றனரா? என்பதும் உறுதி செய்யப்படும். ரயிலில் உள்ள 4 பெட்டிகளில் உள்ள கியூ ஆர் கோட்-ஐயும் குறிப்பிட்ட கால இடைவெளியில் போலீசார் ஸ்கேன் செய்ய வேண்டும். முதற்கட்டமாக எழும்பூரில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி, ராக்போர்ட், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில், கியூ ஆர் கோட் முறை அமலுக்கு வருகிறது.
அதேபோல் சென்டிரலில் இருந்து புறப்படும் புளு மவுண்டென், சேரன், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 4 ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த சில நாட்களில் அனைத்து ரயில்களுக்கும், இது விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் பயணிகளுக்கும், அவர்களது உடைமைகளுக்குமான பாதுகாப்பு 100 விழுக்காடு உறுதி செய்யப்படும்.
