அதிதீவிர புயல் வாயு திசைமாறியிருப்பதால், தற்போதுள்ள நிலவரப்படி குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான வாயு புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதிதீவிர புயலாக உள்ளது. குஜராத்தின் போர்ப்பந்தருக்கு தெற்கே 180 கிலோமீட்டர் தூரத்திலும், வெராவலுக்கு தென்மேற்கே 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அதிதீவிர வாயு புயலானது, சவுராஷ்டிரா மண்டலத்தில், வெராவல் மற்றும் துவாரகா கடற்கரை இடையே இன்று பிற்பகலில் கரையைக் கடக்கக்கூடும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது திசைமாறியுள்ளதால், சவுராஷ்டிரா பகுதியை தாக்காமல் அதை தாண்டி சென்றுவிடக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும், குஜராத்தில் கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாயு புயல் குஜராத்தில் கரையை கடக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருப்பதாக, குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் பங்கஜ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். இயல்புநிலை திரும்பும் வரை அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதோடு, மீட்புப் படைகளும் உஷார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. எனவே தாழ்வான மற்றும் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோரை, குஜராத் மாநில அரசு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
