தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வாயு புயல் காரணமாக தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,
அரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயல் வடக்கு நோக்கி மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள வாயு, குஜராத்தின் போர் பந்தர் – மஹுவா இடையே நாளை காலை கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் தமிழகத்தில் குமரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் குமரி, நெல்லை மாவட்ட மீனவர்கள் அரபிக்கடலுக்கு இன்னும் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாமென அந்த மையம் அறிவுறுத்தி உள்ளது. இதே நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
