மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன்பாப்பாக்குடி கண்மாயை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவனியாபுரத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அயன்பாப்பாக்குடி கண்மாய், அவனியாபுரம், வெள்ளக்கல், பெருங்குடி, அயன் பாப்பாகுடி, நிலையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. வருடம் முழுவதும் வற்றாமல் இருப்பதால் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதில்லை என்பதுடன், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது
இருப்பினும், கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரைகள் மண்டிக் கிடப்பதால் நீர் நிலை பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டமும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்மாயில் கழிவு நீரும் கலந்து வருவதால் கண்மாய் நீர் துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சேறும், சகதியுமாக இந்தக் கண்மாய் காணப்படுவதால் இதில் நீர் அருந்த வரும் கால்நடைகள் ஆகாயத்தாமரை வேர்களில் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்குமுன் ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வாரி பராமரிக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
