ஈரோடு மாவட்டம் கோபி அருகே முகமூடி அணிந்த மர்மநபர்கள் வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை பறித்துச்சென்றது பற்றி போலீசார் விசாரனணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடியை சேர்ந்தவர் துரைராஜ். இவர் இரவு வெளியே சென்றிருந்தபோது அவரது வீட்டுக்குள் முகமூடி கொள்ளையர்கள் நான்கு பேர் புகுந்து துரைரஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா உள்பட நான்கு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகையை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
பெண்கள் சத்தமிடவே ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்து இதேபோல் உங்கள் கழுத்தையும் அறுப்போம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த பத்து சவரன் நகை மற்றும் பீரோவில் இருந்த 15 சவரன் நகை என மொத்தம் 25 சவரன் நகையுடன் தப்பிச்சென்று விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கிருத்திகா திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் நகை இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
