அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள வாயு புயல் மீண்டும் குஜராத்தை நோக்கி திரும்பக் கூடும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரபிக்கடலில் உருவான வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி குஜராத்தை நோக்கி நகர்ந்தது. சவுராஷ்டிரா மண்டலத்தில் வெராவல் மற்றும் துவாரகா கடற்கரை இடையே வியாழக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதன்கிழமை இரவோடு இரவாக வாயுவின் பாதை மாறியதால் அது குஜராத்தை தாக்காமல் கடந்து சென்றுவிடக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மேற்குகடற்கரையோரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் புயல் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
அதேசமயம் வாயு புயல் மேற்குநோக்கி நகர்வதால் குஜராத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் நீங்கியிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கூறியிருந்தார். இந்நிலையில், அதிதீவிர புயலான வாயு அரபுக் கடலில் குஜராத்தின் போர்ப்பந்தருக்கு மேற்கு-தென்மேற்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும், வெராவலுக்கு மேற்கே 310 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து மெல்ல வலுவிழந்து, வடகிழக்கு திசையில் திரும்பக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது நாளை திசைமாறி, வரும் 17, 18ஆம் தேதிகளில் குஜராத்தின் குட்ச் Kutch பகுதியை தாக்கக்கூடும் என மத்திய புவி அறிவியியல் அமைச்சகத்தின் செயலர் ராஜீவன் தெரிவித்துள்ளார். அதிதீவிர புயல் வாயு வலுவிழந்து புயலாகவோ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ கரையைக் கடக்கக்கூடும் என்றும் புவி அறிவியல் அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேசமயம், வாயு புயல் கடல் பகுதியிலேயே வலுவிழந்து கலைந்துவிடக் கூடும் என்றும், புயலாகவே குட்ச் கடற்கரையை தாக்கும் என இப்போதே கூறிவிட முடியாது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மனோரமா மொஹந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜூனாகர்க் ((Junagarh)) உள்ளிட்ட குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
