சந்திரயான் 2-இன் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பை நோக்கி வேகமாக தரை இறக்கிய சமயத்தில், வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திரஸ்டரில் இருந்து அதிக உந்து விசை செயல்பட்டிருக்கலாம் என்றும், அதுவே கட்டுப்பாட்டை இழக்க காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுவரை எந்த நாடுகளும் தொடத் துணியாத நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 2 விண்கலத்தை களமிறக்கும் செயல்பாடு, சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்குத் தொடங்கியது.
சந்திரயான் 2-இன் விக்ரம் லேண்டரை, நிலவில் தரை இறக்கும் மிகச் சவாலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து கொண்டிருந்தனர். நிலவில் இருந்து 30 கிலோ மீட்டர் உயரத்தில் லேண்டர் இருந்த போது, அதன் திரவ எரிபொருள் எஞ்சின் இயக்கப்பட்டது.
மணிக்கு 4 ஆயிரத்து 680 கிலோ மீட்டர் வேகத்தில் 2 நிமிடமும், 4 ஆயிரத்து 320 கிலோ மீட்டர் வேகத்தில் 3 நிமிடமும், 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் 6 நிமிடமும், எஞ்சின் இயக்கப்பட்டு, நிலவை நெருங்கியது விக்ரம் லேண்டர்.
அடுத்த 10 நிமிடங்களுக்கு மணிக்கு 535 கிலோ மீட்டர் வேகத்தில் எஞ்சின் இயக்கப்பட்டு நிலவில் இருந்து 5 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்த விக்ரம், அந்தரத்தில் மிதந்தது. பூமியுடன் ஒப்பிடுகையில், ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையைக் கொண்டது நிலவு என்பதால், 5 கிலோ மீட்டர் என்ற குறைந்தபட்ச உயரத்தில் இருந்து நிலவில் விக்ரமை தரை இறக்குவது மிகவும் சவாலானதாக மாறிப் போனது.
5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து விக்ரம் லேண்டரை நிலவில் தரை இறக்குவதற்கு, மணிக்கு 187 கிலோ மீட்டர் வேகத்தில் 12 நிமிடங்களுக்கு எஞ்சினை இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருந்த வேளையில் நிலவில் இருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த விக்ரம் லேண்டர், கட்டுப்பாட்டை இழந்தது.
இதற்கான காரணம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரும் நிலையில், விக்ரம் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து பேசியுள்ள இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர், லேண்டரில் இருந்த திரஸ்டர் என்ற உந்து விசை உபகரணம் சரியாக செயல்படாமல் போயிருக்கலாம் எனக் கூறியுள்ளார். தரை இறக்கும் செயல்பாட்டின் போது, அதிக அளவிலான உந்து விசையை திரஸ்டர் வெளிப்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிடைமட்டமாக தரை இறங்கிய விக்ரம் லேண்டரின் கோணத்தை 90 டிகிரிக்கு மாற்றும் செயல்பாட்டின் போது, திரஸ்டர் சரியாக செயல்பாடமல் போயிருக்கலாம் என்றும், அதன் காரணமாக விக்ரம் லேண்டர் சுழன்று கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிவேகத்தில் செல்லும் ஒரு கார், சடன் பிரேக்கின் போது திசை மாறுவது போன்ற ஒரு நிலை விக்ரம் லேண்டருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் விஞ்ஞானி குறிப்பிட்டுள்ளார்.
