நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாடந்துரை ,ஆலுவயல் செல்லும் சாலையில் மழைநீர் கரை புரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
உதகையில் இருந்து கேரளா மைசூர் செல்லும் சாலையில் பைக்காரா தேசிய நெடுஞ்சாலையில் நிச்சரிவு ஏற்பட்டு சாலையின் பாதியளவு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த சாலையில்வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன.
தொடர் கன மழை காரணமாக தேன்வயல் இருவயல் மற்றும் வேடன் வயல் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வேடன் வயல் வழியாக ஓடும் பாண்டியாற்றின் கிளை ஆற்றில் தண்ணீர் பெருகி ஓடுகிறது. ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான விவசாய நிலங்களில் உள்ள வாழைத் தோட்டங்களில் மழைநீர் புகுந்துள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் பில்லூர் அணைக்கு 38 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது முறையாக அணை நிரம்பியதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 19 ஆயிரத்து 362 கனஅடியாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 70.81 அடியை எட்டியுள்ளது.
