தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக வைகை, கொட்டக்குடி, சுருளி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக வைகை அணைக்கு வந்து சேரும் தண்ணீர் அளவு அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. தற்போது வைகை அணையின் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 112 கனஅடியாகவும் நீர் திறப்பு 60 கனஅடியாகவும் உள்ளது. நீர்மட்டம் 50 புள்ளி 95 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் மொத்த நீர் இருப்பு 2 ஆயிரத்து 120 மில்லியன் கன அடியாக உள்ளது. இதனிடையே, தொடர் விடுமுறையால் வைகை அணைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், நீர் தேக்க பகுதியில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இன்னும் சிலர் பேர் கரையோரங்களில் சரிவான பாதையில் நடந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற விபரீத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
