அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், எல்பாசோ நகரில் உள்ள வால்மார்ட் கடையில் ஏராளமானோர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது கடையில் நுழைந்த ஒருவன், சரமாரியாக அங்கிருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
26 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். பிள்ளைகளுக்கு தேவையான சீருடைகள், காலணிகள் போன்றவற்றை வாங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தியதும், அங்கிருந்த மக்கள் உயிருக்கு அஞ்சி அங்குமிங்கும் சிதறி ஓடினர்.
தகவல் அறிந்து அதிரடியாக உள்ளே புகுந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞனைக் கைது செய்து இழுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து டிவிட்டரில் கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், மிகவும் மோசமான சம்பவம் என்றும் பலர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் அதிபர் டிரம்ப்புக்கு அனுப்பி வைக்கப்படுவதாக டெக்ஸாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார். பகையுணர்வுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
