ஜெனிவாவில் மனித உரிமை ஆணைய தொடக்க கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், அங்கு மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய இந்திய பிரதிநிதி, இந்தியாவின் இறையாண்மை முடிவை பாகிஸ்தான் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்களை ஐநா மனித உரிமை ஆணைத்தில் இந்தியா சமர்ப்பித்துள்ளது. வெளியுறவு அமைச்சக அதிகாரி விஜய் தாக்கூர் சிங் தலைமையிலான குழுவினர் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்சல் பாச்லெட்டை நேரில் சந்தித்து, பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் பலுசிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் ராணுவ அத்துமீறல்கள் நடைபெறுவதைக் குறித்த ஆதாரங்களை ஒப்படைத்தனர்.
தீவிரவாதத்தை ஏவி ஜம்மு காஷ்மீரில் அமைதியை குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் இந்தியா புகார் அளித்துள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்ப அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஒரு பொய்யை 4 அல்லது 5 தடவை சொன்னால் அது உண்மை ஆகிவிடாது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், பயங்கரவாத இயக்கங்களுக்கு அந்நாடு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதை உலகம் அறியும் என்று குறிப்பிட்டார்.
பின்னர், அவர் விடுத்த ட்விட்டர் செய்தியில், எல்லையில் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும், காஷ்மீரில் அமைதி திரும்ப அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா. மனித உரிமை ஆணையரிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
