வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் நேற்று பகல் வெயில் காய்ந்த நிலையில் மாலையில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தியாகராயநகர், அடையாறு என நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
தாம்பரம் , குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகரிலும் மழை பெய்தது. பூந்தமல்லியில் பலத்த மழையில் வாகன ஓட்டிகளும், பள்ளியில் இருந்து திரும்பிய மாணவ-மாணவிகளும் நனைந்தவாறே சென்றனர்.
மாமல்லபுரம், கோவளம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
இதனிடையே, வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வங்க கடலில் தென்கிழக்கு மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் வருகிற 2-ஆம் தேதி வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 72 மணி நேரத்தில் அந்தமான் நிகோபர், கேரளா மற்றும் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
