நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக விளங்கிவந்த நடராஜர் சிலையை சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், இந்த சிலை திருட்டு வழக்கை விசாரணை செய்தனர். இதனிடையே, திருடுபோன அச்சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அடிலைடில் உள்ள ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியா எனும் அருங்காட்சியத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிலையை ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக் கொண்டதையடுத்து, சிலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் டெல்லியிலிருந்து சிலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.மிகவும் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலைக்கு இசை வாத்தியங்களுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், நடராஜர் சிலை அங்கு எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
