நிலாவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலம் வட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
கடந்த 20 ஆம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்து சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை நான்காவது முறையாக இஸ்ரோ நேற்று மாலை 6.18 மணிக்கு மாற்றி அமைத்தது.
இதன் மூலம் நிலாவின் இருந்து குறைந்த பட்சமாக 124 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக 164 கிலோ மீட்டர் தூரத்திலும் சந்திரயான்-2 விண்கலம் சுற்றி வருகிறது. சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை 100 கிலோ மீட்டர் தூரமாக நாளை மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதன்பின்னர் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரியும் விக்ரம் விண்கலம், வருகிற 7-ஆம் தேதி நிலாவில் தரையிறங்குமென இஸ்ரோ கூறியுள்ளது.
