வருமான வரித்துறையினரின் நோட்டீசுகள், மிரட்டல் புகார்கள் போன்றவற்றை கவனத்தில் கொண்டு வருமான வரி செலுத்துவோருக்கான விதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எளிமைப்படுத்தியுள்ளார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், வருமான வரித்துறையில் இருந்து அனைத்து நோட்டீசுகளும் சம்மன்களும் உத்தரவுகளும் பொதுவில் மையப்படுத்தப்பட்ட ஒரு கணினி அமைப்பின் வழியாக மட்டும் அனுப்பிவைக்கப்படும். அந்த ஆவணத்திற்கு ஒரு அடையாள எண் வழங்கப்படும்.
இந்த முறைமையில் மேற்கொள்ளப்படாத எந்த ஒரு நடவடிக்கையும் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பழைய நோட்டீசுகளையும் அக்டோபர் முதல் தேதிக்குப் பின் கணினி மூலம் இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அக்டோபர் முதல் தேதியில் இருந்து வெளியிடப்படும் அனைத்து நோட்டீசுகளுக்குமான பதில் பெற்ற மூன்று மாதங்களுக்குள் தீர்வு வெளியாகிவிடும்.
இதைப் போலவே நிறுவனச் சட்ட விதிமீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்பட மாட்டாது. சிவில் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நடத்தப்படும். சி.எஸ்.ஆர். விதிமுறைகளை நிறைவேற்ற நிறுவனங்களுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
