காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் இதுவரை 90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதர் வைபவத்தின் 46 ம் நாளான இன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க திரண்டுள்ளனர்.
நாளையுடன் தரிசனம் நிறைவடைவதால், அடுத்த 40 ஆண்டுகளுக்கு அத்திவரதரை குளத்தில் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தன.
அத்திவரதரை செவ்வாய்கிழமை நள்ளிரவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் வந்து தரிசனம் செய்தார். அவர் அத்திவரதருக்கு பட்டாடை செலுத்தி அர்ச்சனை செய்து வழிபட்டார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகனும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி உள்ளிட்டோர் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
இதனிடையே தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இன்று மதியம் 12 மணியுடன் வி.ஐ.பி. மற்றும் விவிஐபி தரிசனம் நிறைவடையும் என்றும் நாளை மாலையுடன் தரிசனம் முழுமையாக நிறைவு பெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். 17ஆம் தேதி அத்திவரதரை குளத்துக்குள் வைக்கும் பணிகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
45 நாட்களில் தரிசனம் செய்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், நாளையுடன் தரிசனம் முடிவதால் இன்றும் நாளையும் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
