ஒரு சவரன் தங்கத்தின் விலை முதல் முறையாக 30 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.
சென்னையில் நேற்று வர்த்தக நேர முடிவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 832 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை 30 ஆயிரத்து 120 ரூபாயாக உயர்ந்தது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 36 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 765 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வருகிறது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள வர்த்தக மந்தம் காரணமாக பாதுகாப்பு என்று கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்திற்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்து விலையும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சென்னையில் ஒரு சவரனுக்கு 3640 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தையில் மந்த நிலை போன்ற காரணங்களே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை ஓரிரு மாதங்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது மிக மிக கடினம் என்று கூறியுள்ள அவர்கள், தங்கம் தேவைப்படுபவர்கள் அவ்வப்போது விலை சற்று குறையும் போது வாங்கி வைத்துக் கொள்வது சிறந்தது என்று ஆலோசனை கூறியுள்ளனர். மத்திய அரசின் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
