இப்படி ஒரு போட்டியை இதுவரை திண்டுக்கல் பார்த்ததும் இல்லை, இனியும் பார்க்கப் போவதும் இல்லை என்று கூறுமளவுக்கு அமைந்தது ஐ ட்ரீம் காரைக்குடி காளை மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி.
சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் சீசன் – 4-ன் இரண்டாவது போட்டி நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி. அதற்கு ஏற்றார் போல் முதல் ஓவரின் 5-வது பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ஐ ட்ரீம் காரைக்குடி காளையின் துவக்க வீரர் ஆதித்யா. அந்த விக்கெட்டை பந்துவீசி கேட்ச்சையும் பிடித்து அசத்தினார் திருச்சி வீரர் எல்.விக்னேஷ். பவர் ப்ளேவின் கடைசி ஓவரில் அதாவது ஆறாவது ஓவரில் அவுட் சைட் போன பந்தை அடிக்கப் போய் விக்கெட்டை இழந்தார் சூர்யபிரகாஷ். சரவண குமார் பந்து வீச, விக்கெட் கீப்பர் மணிபாரதியிடம் அந்த பந்து தஞ்சம் அடைந்தது.
ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பாகுபலியென திடமாக நின்றார் ஐ ட்ரீம் காரைக்குடி காளையின் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த். அட்டகாசமான கவர் ட்ரைவ், மிட் ஆனில் சிக்ஸ் என்று அவர் இன்று ஆடிய ஆட்டத்தை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். 36 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அணிக்கு அழுத்தமான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். திருச்சி அணியின் கேப்டன் சாய் கிஷோரின் பந்தை ஸ்வீப் செய்ய முயலும் போது லோ பவுன்சில் வந்த பந்து மிடில் ஸ்டெம்பை பதம் பார்த்தது. விக்கெட் விழுந்த போதிலும் அனிருதாவின் ஆட்டம் கிரிக்கெட் ரசிர்களுக்கு விருந்தாக அமைந்தது.
அனிருதாவின் விக்கெட்டுக்குப் பிறகு சில அதிரடிகளை காட்டினார் பஃப்னா. அதிலும் அந்த இரண்டு சிக்சர்கள் உலகத்தரம். 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து தன் பங்களிப்பை நிறைவு செய்தார் பாஃப்னா. முதலில் அமைதியாகவும், பின்னர் அதிரடியாகவும் விளையாடிய ஸ்ரீனிவாசன் 32 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அவருக்கு பக்கபலமாக கடைசி ஓவர்களில் சூறாவளியாய் சுழன்று அடித்தார் ராஜ்குமார். 13 பந்துகளில் 28 ரன்கள். அதில் மூன்று சிக்சர்களும் உண்டு.
ஒட்டுமொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை எடுத்தது ஐ ட்ரீம் காரைக்குடி காளை. இதன்பின்னர் விளையாடிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் அரவிந்த், பரூவா, ராகவ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் முரளி விஜய் 19-வது ஓவர் வரை களத்தில் நின்று அச்சமூட்டினார். 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 3 சிக்சர்களையும் அவர் பறக்க விட்டார். இருந்தாலும் 20 ஓவர் முடிவில் திருச்சி அணியும் 171 ரன்கள் சேர்க்க, சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
திருச்சி அணியின் முரளி விஜய் -கணபதி களமிறங்க காரைக்குடி அணியின் சாம் பந்து வீசினார். இதில் ஒரு சிக்சருடன் 11 ரன்களை எடுத்தது திருச்சி வாரியர்ஸ். பின்னர் காரைக்குடி காளையின் அனிருதா – ராஜ்குமார் ஆகியோர் களமிறங்கினர். இரண்டு சிக்சர்களை பறக்க விட்ட அனிருதா ஸ்ரீகாந்த் அணியை வெற்றி பெறச் செய்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி போன்று சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஆட்ட நாயகனாக அனிருதா ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்ததாக, ஐ ட்ரீம் காரைக்குடி காளை அணி வருகிற 24-ந் தேதி வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.
