மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முனம் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ராஜஸ்தானின் கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதி எம்.பி.யான ஓம் பிர்லாவை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ள பா.ஜ.க. அதற்கான கடிதத்தை மக்களவை செயலரிடம் நேற்று வழங்கியது.
ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி ஆகியோர் முன்மொழிந்துள்ளனர். பாஜக, சிவசேனா, அகாலி தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 10 கட்சிகள் அதற்கு ஆதரவு அளித்துள்ளன.
ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக 3 முறை இருந்துள்ள ஓம் பிர்லா, கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
