ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உடனடியாக தடைபெற சிதம்பரம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், 21ந் தேதி இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனிடையே, டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களைத் தொடர்ந்து, மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடைபெறும் விசாரணையில், தன்னை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரிக்கப்படும்.
ப.சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்ட காவல் இன்றுடன் முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது காவலை நீட்டிக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது
