ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக, பாதுகாப்பு கருதி அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டன. தீவிரவாத அச்சுறுத்தல் மிகுந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
பிரிவினைவாத தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சுற்றுலாப்பயணிகள் மற்றும் புனித யாத்ரீகர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதை அடுத்து ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாகவும், அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதெனவும் மத்திய அரசு அறிவித்தது அந்த அறிவிப்புகள் வெளியாகி 2 மாதங்கள் கடந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது, சுற்றுலாப்பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கை அறிவுறுத்தல் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இன்று முதல் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதுகெலும்பாக இருப்பது சுற்றுலா தான். ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் ஒன்றரே முக்கால் லட்சம் பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.
