ஒருவேளை, பாகிஸ்தானோடு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினால், அது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்ததாகத் தான் இருக்கும் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் நடைபெற்ற பாஜக பேரணியில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்கு யாரிடமும் சான்றிதழ் பெறத் தேவையில்லை என்று, ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். எனவே, இனி, பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை என்றால், அது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும் என்றும், கூறியிருக்கிறார்.
பாலக்கோட் தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதலுக்கு இந்தியா திட்டமிடுவதாக, சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பதாக, ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம், பாலக்கோட்டில், இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களையும், தீவிரவாதிகளையும் அழித்தொழித்த நிகழ்வை, பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.
