ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று ஃபிட்னஸ் இந்தியா இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் மக்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் என்ற மிகப்பெரிய விழாவைக் கொண்டாட நாடு தயாராகி வருவதாக அவர் கூறினார். மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் சேவை என்பது பிரிக்க முடியாத பகுதி என்று குறிப்பிட்ட மோடி, அவரது பிறந்தநாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்தை மிகப்பெரிய அளவில் மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாட்டுக்கு சேவையாற்றுவதன் மூலம் மகாத்மா காந்திக்கு சிறப்பான அஞ்சலியை செலுத்த முடியும் என்றும் மோடி கூறினார். கிருஷ்ண ஜெயந்தி விழாவை நினைவு கூர்ந்த அவர், தற்காலத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு கிருஷ்ணரின் வாழ்வின் மூலம் தீர்வு காணலாம் என்றார்.
தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று பிட்னஸ் இந்தியா இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக மோடி அறிவித்தார். அனைவரும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், அதில் அக்கறை செலுத்தவும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பேர் ஃகிரில்ஸ் உடன் இந்தியில் உரையாடியதை அவர் எப்படி புரிந்து கொண்டார் என்று பலரும் கேள்வி எழுப்புவதாக சுட்டிக் காட்டிய மோடி, அதற்கு விளக்கம் கொடுத்தார். இந்தியில் உள் வாங்கும் வார்த்தைகளை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லும் தொழில்நுட்பக் கருவி பேர் ஃகிரில்சின் காதில் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அதை வைத்தே உரையாடல் சிறப்பாக நடந்ததாகவும் மோடி கூறியுள்ளார்.
