தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
திரையரங்க டிக்கெட் முன்பதிவுகளை முறைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் புதிய செயலி ஒன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்ளதாகக் தெரிவித்த அவர், அதில் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்யும் வகையில் இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார் கடம்பூர் ராஜூ.
மேலும் தற்போது ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக வசூலிக்கப்படும் சேவை கட்டணம் இன்றி டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதியும் அரசின் புதிய செயலியில் அறிமுகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் புக் மை ஷோ மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்குகளின் செயலி மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தால், வழக்கம் போல அவர்கள் நிர்ணயித்துள்ள சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கடம்பூர் ராஜூ சுட்டிக்காட்டினார்.
இதனிடையே முதற்கட்டமாக மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளிலும் படிப்படியாக தமிழகம் முழுவதுமுள்ள ஆயிரம் திரையரங்குகளிலும் அரசு செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அமலுக்கு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கணிணிமயமாக்கப்பட்ட வாகன நிறுத்தம் மற்றும் விவிடி சிக்னல் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்துவைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார்.
