இந்திய கடற்படை எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், அண்டை நாட்டில் இருந்து நமது கடல் எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவும் அபாயம் இருப்பதை மறுக்க முடியாது என்றார்.
இதனால் இந்திய கடல் வழிகளை கண்காணிக்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்திய எல்லையை காக்க கடல் படை முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது என்ற அவர், எந்த சவாலையும் கடற்படை எதிர்கொள்ளும் என்றார்.
நாட்டின் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவதாக அவர் கூறினார். காஷ்மீர் மாநிலத்தில் எல்லை வழியாக ஊடுருவ பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக வந்த உளவுத்துறை தகவலை அடுத்து அங்கு படைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
