கனமழை-வெள்ளத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 124 அடி நீர்தேக்கும் உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 86.9 அடியாக உள்ளது. ஹேமாவதி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருக்கிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை முழுகொள்ளளவை எட்டிய பிறகு, அங்கிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும், தற்போது விநாடிக்கு 421 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேசமயம், 84 அடி உயரம் கொண்ட கபினி அணை நிரம்பி விட்டது. இதனால் அணைக்கு வரும் மொத்த நீரும், விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் கர்நாடகத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
கபினியின் துணை அணையான தாரகா அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகம் நோக்கி காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 421 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியில் திறந்துவிடப்படும் நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக, இன்று இரவு ஒகேனக்கல் காவிரியில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஒகேனக்கல்லில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்
நேற்று நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரத்து 100 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் நீர்திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 54 அடியாகவும், நீர்இருப்பு 20.41 டிஎம்சி ஆகவும் உள்ளது. கர்நாடக அணைகளில் திறக்கப்படும் நீர் மேட்டூர் அணைக்கு நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
