உரிய ஆவணங்கள் இன்றி தூத்துக்குடிக்கு கடல் வழியாக கப்பலில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப்பிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தனது நாட்டில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்தியாவில் தஞ்சம் அடைவதற்காக வந்ததாக அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015-ஆம் ஆண்டு மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாக அப்போதைய துணை அதிபர் அகமது அதிப்புக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேல்முறையீட்டின் அடிப்படையில் சிறைத் தண்டனை 18 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகள் மட்டும் சிறையில் இருந்த அவரை மாலத்தீவு உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து கடந்த மே மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த அகமது அதிப் திடீரென தலைமறைவானார்.
இதனிடையே கடந்த 11-ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலதீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற கப்பலில் இந்தோனேசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும் இந்தியர் ஒருவரும் சென்றனர்.
இந்நிலையில் கப்பல் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பி வந்த நிலையில் அந்தக் கப்பலில் 10-வதாக ஒருவரும் வந்தது தெரிய வந்தது.
மேலும் அவர் கப்பலில் தன்னுடன் இருந்தவர்களிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தன்னை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை சிறிய படகு ஒன்றில் கரைக்கு அழைத்து வந்த அவர்கள் தங்களுடன் 10-வதாக வந்த ஒருவர் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உளவுத்துறையினர் மற்றும் கடலோரக் காவல்படையினர் அந்தப் படகுக்குச் சென்று புதிதாக வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என தெரிய வந்தது.
விசாரணையில் அவர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் என தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மாலத்தீவில் அரசியல் காரணங்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் தான் இந்தியாவில் தஞ்சம் அடைய வந்ததாகவும் அகமது அதிப் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
