கேரளாவில் மழைக்கு 43 பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் என்ற பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்குவதால் அங்குள்ள 44 ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. வயநாடு, மலப்புரம், கண்ணூர், இடுக்கி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
24 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக உடுமலை-மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 64 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக 738 முகாம்கள் தயார்நிலையில் உள்ளன.
மலப்புரம் மாவட்டம் பொத்துக்கல்லு என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் புதையுண்டு இருப்பதாக அஞ்சப்படுகிறது. ஆனால், பதினெட்டு குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரை நிலச்சரிவுக்குப் பின் காணவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வயநாடு மாவட்டம் புதுமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் காயங்களுடனும் உடல்நல பாதிப்புகளுடனும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
மீட்பு நடவடிக்கையில் உதவுமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் ராணுவம்,விமானப்படைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ராகுல்காந்தி, கேரள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். வயநாடு உள்ளிட்ட அனைத்து கேரள மக்களுக்கும் எல்லாவித உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
மாநிலத்தில் இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் இன்று பிற்பகல் 3 மணி வரை மூடப்பட்டுள்ளது.
சென்னை -கேரளா இடையிலான திருவனந்தபுரம் மெயில் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சென்னை எக்ஸ்பிரஸ் , கேரள எக்ஸ்பிரஸ் , உள்ளிட்ட பல ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
