கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்குகிறது. கண்ணூர், வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட மாவடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளும் நிரம்பி வருகின்றன.
மணிமாலா, மீனாச்சல், பெரியாறு, மூவாட்டுப்புழா, காளியாறு, வளப்பட்டணம், இருவஞ்சிப்புழா, பம்பை உள்ளிட்ட ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.
கோழிக்கோடு
கோழிக்கோடு மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வெள்ளத்தில் மிதக்கின்றன.
இடுக்கி
இடுக்கி மாவட்டத்தின் கல்லார்குட்டி அணையில் மடை திறந்த வெள்ளம் பாய்வது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வண்டிப்பெரியார், சப்பாத்து, பீர்மேடு, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக அருகே அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர் மழையின் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.
சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் விரைவாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இயற்கை பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலப்புரம்
மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூர், பெரிந்தல்மண்ணை பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் கயிறு கட்டியும், படகுகள் மூலமும் மீட்டனர்.
வயநாடு
வயநாடு மாவட்டத்தில் மழைநீர் பெருக்கெடுத்ததால் தேசிய நெடுஞ்சாலைகள் நீரோடைகள் போல காட்சியளிக்கின்றன.
இதனிடையே, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யக்கூடும் என ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகளில் ராணுவத்தின் உதவியை கேரளா நாடியுள்ளது.
