உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ஜுரம் விலகுவதற்குள் ரசிகர்களை கட்டிப்போட வந்துவிட்டது சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு ப்ரீமியர் லீகின் 4-வது சீசன். முதல் மூன்று சீசன்களுக்கு மக்களும், ரசிகர்களும் அளித்த வரவேற்பு நான்காவது சீசன் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் புத்தம் பொலிவுடன் ஒவ்வொரு அணியும் இந்த சீசனில் களமிறங்க உள்ளன. அந்தவகையில் இம்முறை கோப்பையை குறிவைத்து களமிறங்குகிறது ஐ ட்ரீம் காரைக்குடி காளை அணி.

தினேஷ் கார்த்திக், அனிருதா ஸ்ரீகாந்த், யோ மகேஷ், கவின், சூர்யப்ரகாஷ், லஷ்மன், ஆதித்யா, கிஷன் குமார், மன் கே பஃப்னா, அஸ்வத் முகுந்தன், ஸ்வாமிநாதன், அஜீத் குமார், கணேஷ், சீனிவாசன், ராஜ்குமார், மோகன் ப்ரசாத், ஷாஜகான், கருப்பசாமி, சுனில் சாம், அஸ்வின் குமார், அபினவ் விஷ்ணு, அஸ்வின் பாலாஜி என 22 பேர் கொண்ட படை, ஐ ட்ரீம் காரைக்குடி காளையாக களமாட வருகின்றது.
ஐ ட்ரீம் காரைக்குடி காளை அணியோடு தொடர்ச்சியாக பயணித்து வரும் பி.சி.பிரகாஷ் தான் இம்முறை பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். அணியின் வீரர்களுடன் கலந்து பழகிய அனுபவம் உள்ளதாலும், கடந்த முறை விளையாடிய வீரர்களே பெரும்பாலும் தற்போதைய அணியில் நீடிப்பதாலும் ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட திறனை அறிந்திருப்பது இவரது கூடுதல் பலமாகும். போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் தன்மை, வீரர்களும் குணாதிசயம் இரண்டையும் அறிந்திருக்கும் பயிற்சியாளர் கிடைத்திருப்பதும் ஐ ட்ரீம் காரைக்குடி காளை அணியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

அணியின் உரிமையாளராக மட்டும் அல்லாமல் அணியின் அத்தனை செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு போட்டியில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல கடைசிவரை போராடுவதே விளையாட்டின் சிறப்பு என்று களத்திற்கு வெளியே விளையாடுகின்றனர் ஐ ட்ரீம் அணியின் உரிமையாளர்களான திரு.மூர்த்தி மற்றும் அவரது மகன் திரு.ரிஷி ஸ்ரீராம் மூர்த்தி.
இம்மாதம் 19-ந் தேதி துவங்கி அடுத்த மாதம் 18-ந் தேதி வரை நடைபெற உள்ளது சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் சீசன்-4. இதன் முதல் ஆட்டம் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் வரும் 19-தேதி நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோத உள்ளனர். ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் தலா ஒருமுறை மாேத வேண்டும். மொத்தம் 32 போட்டிகள் நடைபெறும். திண்டுக்கல் என்.பி.ஆர் கல்லுரி மைதானம், திருநெல்வேலி ஐசிஎல் சங்கர் நகர் மைதானம் மற்றும் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் சீசனை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், இரண்டாவது சீசனை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், மூன்றாவது சீசனை சீக்கெம் மதுரை பேந்தர்ஸ் அணியும் கைப்பற்றின. இந்த நான்காவது சீசனை வெல்லப் போவது யார் என்ற பரபரப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. சீறும் காளையென கோப்பையை குறிவைத்து களமிறங்குகின்றனர் ஐ ட்ரீம் காரைக்குடி காளை அணியினர்.
ஜுலை 20-ந் தேதி ரூபி திருச்சி வாரியர் அணியுடனும், ஜுலை 24-ந் தேதி வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியுடனும், ஜுலை 26-ந் தேதி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியுடனும், ஜுலை 29-ந் தேதி திண்டுக்கல் ட்ராகன் அணியுடனும், ஆகஸ்ட் 1-ந் தேதி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடனும், ஆகஸ்ட் 4-ந் தேதி லைகா கோவை கிங்ஸ் அணியுடனும், ஆகஸ்ட் 8-ந் தேதி சீகெம் மதுரை பேந்தர்ஸ் அணியுடனும் ஐ ட்ரீம் காரைக்குடி அணியினர் மோத உள்ளனர்.
