சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் சீசன் – 4-ன் 7-வது போட்டியில் ஐ ட்ரீம் காரைக்குடி காளை அணியும், விபி காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின. திண்டுக்கல், நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற காரைக்குடி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் விளையாடாத ஆல் ரவுண்டர் யோ மகேஷ் இந்த போட்டியில் காரைக்குடி அணியில் களமிறங்கினார்.
துவக்க வீரர்களாக களமிறங்கிய விஷால் – முகிலேசுக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார் காரைக்குடி காளையின் வேகப்பந்து வீச்சாளர் சுனில் சாம். ஆட்டத்தின் நான்காவது பந்தை முகிலேஷ் அடித்து ஆட முயல அது பேட்டின் முனையில் பட்டு விக்கெட் கீப்பர் அனிருதா ஸ்ரீகாந்திடம் தஞ்சம் அடைந்தது.
அவரைத் தொடர்ந்து சஞ்சய் யாதவ் களமிறங்கினார். வந்தது முதல் அட்டகாசமான ஷாட்களை ஆடினார் சஞ்சய். குறிப்பாக 3-வது ஓவரில் ஒரு அபார சிக்சர் மற்றும் அற்புதமான கவர் ட்ரைவ் விளாசினார். சஞ்சய் – விஷால் ஜோடி நிதானமாகவும், தேவையான இடங்களில் பவுண்டரிகளையும் எடுத்து ரன்களை சேர்த்தனர். விஷால் 27 ரன்கள் எடுத்த நிலையில், லஷ்மண் பந்தில் மான் பாஃப்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மிக உயரம் பறந்த அந்த பந்தை கவனம் சிதறாமல் பிடித்து அசத்தினார் பாஃப்னா.
இதன்பின்னர் சஞ்சய் யாதவுடன் ஜோடி சேர்ந்தார் காஞ்சி வீரன்ஸ் அணியின் அபராஜித். அவர் தன் பங்குக்கு 19 ரன்கள் மட்டும் சேர்த்து சுனில் சாம் பந்தில் ஆதித்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சதீஷ், சஞ்சயுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் காரைக்குடி காளையின் பந்து வீச்சாளர்களுக்கு சோதனைகளை கொடுக்க தவறவில்லை. இரண்டு முக்கிய கேட்ச்சுகளையும் காரைக்குடி காளை வீரர்கள் பிடிக்க தவறினர்.
கடைசி ஓவரில் சஞ்சய் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோகன் பிரசாத் பந்தில் ராஜ்குமாரிடம் கேட்ச் கொடுத்து சதத்தை தவறவிட்டார். சஞ்சயின் அபார ஆட்டத்தில் ஆறு சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய சதீஷ் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் விபி காஞ்சி வீரன்ஸ் அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐ ட்ரீம் காரைக்குடி காளை களமிறங்கியது.
துவக்க வீரர்களாக காரைக்குடி காளை அணியின் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த் – ஆதித்யா ஆகியோர் களமிறங்கினர். காஞ்சி அணியின் தாமரைக்கண்ணன் வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் அனிருதா ஸ்ரீகாந்தின் ஆப்-ஸ்டம் எகிறியது. ரன்கள் எதுவும் எடுக்காமல் அனிருதா வெளியேறியதால் காரைக்குடி காளை அணியின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது.
அவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரரான ஆதித்யா 10 ரன்கள் எடுத்து சுதேஷ் பந்தில் விக்கெட் கீப்பர் லோகேஷ்வரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆர்.சீனிவாசனையும் விரைவிலேயே பெவிலியனுக்கு திருப்பினார் காஞ்சி அணியின் தாமரைக் கண்ணன்.
பேட்டிங்கில் கலக்கிய சதீஷ் தன்னுடைய முதலாவது ஓவரில் மிக சிறப்பாக பந்து வீசினார். 12 ரன்களுக்கு சூர்யபிரகாசையும், அடுத்த பந்தில் யோ மகேசையும் வீழ்த்தினார். அதே ஓவரில் மன் பாஃப்னாவை தாமரைக்கண்ணன் ரன் அவுட் ஆக்கினார். இந்த ஓவர் காரைக்குடி காளை அணியை ஆட்டம்காணச் செய்தது என்றே சொல்லலாம்.
எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். 14.4 ஓவர்கள் முடிவில் வெறும் 67 ரன்களை மட்டும் சேர்த்த காரைக்குடி காளை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை காஞ்சி அணியின் சதீஷ் தட்டிச் சென்றார்.
முதல் போட்டியில் திருச்சி அணியை வென்ற காரைக்குடி அணி 2-வது போட்டியில் காஞ்சியிடம் வீழ்ந்துள்ளது. வருகிற 26-ந் தேதி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் காரைக்குடி காளை பலப்பரிட்சை நடத்த உள்ளது.
