தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் இன்று காலை ஒரத்தூர், லட்சுமிபுரம்,கஸ்பாகரணை,தும்பூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச்சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.அப்போது அவர் பெண்களின் காலை தொட்டு வணங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டார். முன்னதாக அவருக்கு மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மேல்கரணை, சிறுவளை, ஏழு செம்பொன், கஞ்சனூர், கல்யாணபூண்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று மாலை கனிமொழி எம்பி மூங்கில்பட்டு, மதுரபாக்கம், ராதாபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜய் பாஸ்கர், புதுக்குறிச்சி, ஆழ்வார்னேரி, மருதகுளம், கோவை குளம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
நெல்லை கே ட்டீ சி நகரில் நடந்த நாங்குனேரி தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நாங்குனேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் களக்காடு, மேலச்செவல், சோனாவூர், கோதைச்சேரி, புளியங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர், தன்னை வெளியூர் வேட்பாளர் என்று சொல்வதை மறுத்ததுடன், அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் தனது சொந்த ஊர் என்றும், தான் வெற்றிபெற்றதும், கடைசிவரை தொகுதி மக்களுடன் தங்கியிருப்பேன் என்றும் பேசினார்.
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து, என். ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி , அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் சித்தன்குடி பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதில் அதிமுக, பா ஜ க நிர்வாகிகள் பங்கேற்று ஆதரவு திரட்டினார்கள்.
இதேபோல் இங்கு திமுக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தென்றல் நகர் , ஞானப்பிரகாசம் நகர் பகுதியில் திமுக, விடுதலை சிறுத்தைகள், மற்றும் கம்யூனிஸ்டு நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
