காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை அடுத்து படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமர்நாத் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்களிலும் பெட்ரோல் பங்குகளிலும் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். விமானம் மூலமாக நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர்.
எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கெரான் எனுமிடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. போபார்ஸ் பீரங்கிகளுடன் அணி வகுத்து நின்ற இந்திய பாதுகாப்பு படையினர் அத்துமீறிய பாகிஸ்தான் வீரர்களுடனும் தீவிரவாதிகளுடனும் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். எல்லையில் 36 மணி நேரமாக நீடித்த இந்த சண்டையில் 4 பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனிடையே நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததும் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் நிலைமையை நேரில் ஆராய உள்ளார். அவர் பதவியேற்ற பின் முதன் முறையாக காஷ்மீருக்கு செல்கிறார்.அங்கு ஆளுநர், ராணுவ உயரதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
