அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கிறிஸ்டோபர் வில்சன் தலைமையில் டெல்லி வந்துள்ள அதிகாரிகள் குழுவினர் வர்த்தகத்துறையின் கூடுதல் செயலர் சஞ்சய் சட்டா தலைமையிலான இந்திய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருநாட்டு வர்த்தகம் மற்றும் அமெரிக்கப் பொருட்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு விவகாரம் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்பட்டது.அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியா மிக அதிக அளவிலான சுங்க வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரச்சினை எழுப்பியிருந்தார். ஒசாகாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது இப்பிரச்சனையை எழுப்பிய டிரம்ப், இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று பிரதமர் மோடி கூறியதை ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க வர்த்தக அதிகாரிகள் குழு இந்தியாவுக்கு வந்துள்ளது. முன்னதாக இக்குழுவினர் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இருதரப்பினரும் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பியூஷ் கோயல் விரைவில் வாஷிங்டன் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
