இஸ்லாமாபாத்: இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
திமிர் பேச்சு:
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது: எந்த ஆதாரமும் இல்லாமல், பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்தி வருகிறது. வன்முறைக்காக எங்கள் மண்ணை யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது எங்களது கொள்கை. காஷ்மீர் தாக்குதலில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பது குறித்து ஆதாரம் வழங்கினால், நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். நாங்களும் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளோம். காஷ்மீர் பிரச்னைக்கு பாகிஸ்தான் மீது வேண்டுமென்றே குற்றம்சாட்டப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என விரும்புகிறோம். இது போன்ற தாக்குதல் சம்பவங்களால், பாகிஸ்தான் எப்படி பயன்பெறும். இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுப்போம். போரை துவக்குவது மனிதர்கள் தான் என அனைவரும் அறிந்தாலும், இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை கடவுள் தான் அறிவார். போரை ஆரம்பிப்பது எளிது. ஆனால், முடிவுக்கு கொண்டு வருவது கடினம். பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
