கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் வளி மண்டலத்தில் மேற்கு பகுதிகளில் இருந்து வரும் காற்றின் சுழற்சி காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் மற்றொரு டிவிட்டர் பதிவில், ஒடிசாவில் இன்னும் 3 தினங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் ஓடிசாவில் அடுத்த 72 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கர்நாடகாவில் உள்ள 22 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
