மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்ததால் இதமான சூழல் காணப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்ளில் 26 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று பெய்த மழையால் மாநகராட்சிப் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தேனி, போடி, அல்லிநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலும் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
மதுரை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
தமிழகத்தில் வேலூர் திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
