ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு எதிராக புகார் அளிக்க சீனாவின் ஆதரவை பாகிஸ்தான் நாடியுள்ள நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இன்று முதல் மூன்று நாட்களுக்கு சீனப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய-சீனா உயர்நிலை செயல்பாடு தொடர்பான மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். இந்திய-சீன கலாசார பரிவர்த்தனைகள் குறித்தும் அவர் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார். சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள ஜெய்சங்கர், இந்தியாவுக்கு எதிராக சீனாவை தமக்கு ஆதரவாக திரட்டி வரும் பாகிஸ்தானின் முயற்சியை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் விமானம் ஏறி பெய்ஜிங் சென்ற பாகிஸ்தான் வெளியுறவுஅமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க சீனா முன்வராததால் குரேஷிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவுடன் சேர்ந்து, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக புகார் அளிக்க பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய சீன நட்பை பலப்படுத்தும் விதமாக ஜெய்சங்கரின் பயணம் அமைந்துள்ளது.
