சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ள, ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் நிலுவைகளை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அடுத்த ஒரு மாதத்துக்குள் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜி.எஸ்.டி. வரிவகையில் வணிக நிறுவனங்கள் நடைமுறை சார்ந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கூடுதலாகச் செலுத்திய தொகை சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக வணிக நிறுவனங்களின் நிதிச் சிக்கல்களுக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் தொகை நிலுவைகளை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் 60 நாட்களுக்கு மேல் நிலுவைத்தொகை இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஜிஎஸ்டி ரிட்டர்ன் நிலுவைத் தொகைகளை திருப்பி வழங்குவதை விரைவுபடுத்தும் வழிமுறைகளை, மத்திய மறைமுக வரிகள் வாரியம் இறுதி செய்துள்ளது. நிலுவைத் தொகை அதிகமானது அல்ல என்ற போதும் தொகையை விரைவில் தொடர்புடையவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலுவைகளை வழங்குவது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
