மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உரான் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு ஆலை செயல்பட்டு வருகிறது.
அதிகாலையில் இந்த ஆலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதில் ஊழியர்கள் 5 பேர் பலியானதாகவும், 8 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் நெருக்கடிகால மேலாண்மை பிரிவினர் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் வடிகால் அமைப்பு இருக்கும் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவிற்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
மேலும் ஆலைக்கு வந்து கொண்டிருந்த எரிவாயு, குஜராத் மாநிலத்திலுள்ள ஹசீரா ஆலைக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆலையை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவராத நிலையில், தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
