ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி அதன் சேவை நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அன்னிய செலாவணி சட்ட விதிமீறல் குற்றம் தொடர்பாக இச்சோதனை நடத்தப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியால், கடந்த ஏப்ரல் மாதம் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. அதன் நிறுவனர் நரேஷ் கோயல், தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது, திவால் சட்டத்தின்கீழ் தீர்வு பெறுவதற்கான நடவடிக்கையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பெருமளவிலான முறைகேடுகள், நிதியை வேறு பணிக்கு திருப்பி விடுதல் போன்றவைதான் நிறுவனத்தின் பரிதாப நிலைக்கு காரணம் என்று மத்திய கம்பெனி விவகார அமைச்சகம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அன்னிய செலாவணி சட்ட விதிமீறல் குற்றம் தொடர்பாக, கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கத்தில், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள வீடுகளில் இச்சோதனை நடத்தப்பட்டது.
