சோதனை அடிப்படையிலான மின்சாரப் பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் வரை A1 என்ற வழித்தடத்தில் மின்சாரப் பேருந்து இயக்கப்படவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சார பேருந்தின் சேவையை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மின்சார பேருந்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் வரை A1 என்ற வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேருந்தின் நீளம் 9.2 மீட்டர், அகலம் 2.6 மீட்டர். பேருந்தில் 32 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 25 பேர் வரை நின்று பயணம் செய்யலாம். ஏறுவதற்கு தனி வழி, இறங்குவதற்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்குவதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை வாகனம் என்பதால் பச்சை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் செய்யப்படவுள்ளது.
ஸ்வாப் தொழில்நுட்பம் என்றால், ஒருமுறை பயணம் செய்து வந்தப்பின், பேருந்தின் பேட்டரி கழற்றப்பட்டு புதிய பேட்டரி பொருத்தி மீண்டும் இயக்கப்படும். அதற்குள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பேட்டரி சார்ஜ் செய்யப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 கிலோமீட்டர் வரை இயக்கலாம். 40 கிலோ மீட்டருக்கு ஒருமுறை மின்கலனை ஸ்வாப் செய்து கொள்வதன் மூலம், நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர் தூரம் வரை இப்பேருந்தை இயக்கலாம். ஒரு முறை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் சென்று மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பின் பேட்டரி மாற்றப்படும். பேட்டரி மாற்ற 5 முதல் 10 நிமிடங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. பேட்டரி மாற்றும் ஸ்டேஷன் பல்லவன் இல்லம் அருகில் உள்ள மத்திய பணிமனையில் உள்ளது.
இப்பேருந்தில், பேட்டரி இருப்பு நிலை, வெப்பநிலை ஆகியவற்றை அவ்வப்போது கண்டறிதல், ஓட்டுநரின் செயல்பாடு, பேருந்தின் செயல்பாடு, பேருந்தில் ஏற்படும் மின்கசிவினை கண்டறிந்து, அதை தானாக செயலிழக்க வைத்தல் ஆகிய வசதிகள் உள்ளன. இந்த நவீன வசதிகளை ஒருங்கிணைத்து ரிமோட்டில் கண்காணிக்கக்கூடிய “ஐ – அலர்ட் சிஸ்டம்” பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு, இந்திய போக்குவரத்து தரக் கட்டுப்பாடு அமைப்பினால் தகுதி சான்றும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்து மூன்று மாதம் சோதனை முறையில் இயக்கப்படவுள்ளது.
பேருந்து பவர் ஸ்டியரிங் வசதி கொண்டது. ஏர் பிரேக் வசதி கொண்டது. டியூப் லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இப்பேருந்தில் தானியங்கி கதவுகளும், வழித்தடங்களை அறியக்கூடிய ஜிபிஎஸ் வசதியும் உள்ளது.
